விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு
சென்னை (ஏஜென்சி), 31 மார்ச் 2009 ( 12:08 IST )
பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்கள் பெயர் நாளை அறிவிக்கப்படும் என்று அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தனித் தொகுதிகளை தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒதுக்கினார்.இதனைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் முதலமைச்சர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.அப்போது, விழுப்புரம் தனித்தொகுதிக்கு பதிலாக, கள்ளக்குறிச்சி பொதுத் தொகுதியை விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கித்தர வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலர்கள் சிந்தனை செல்வன், ரவிக்குமார், தலைமை நிலைய செயலர்கள் பாவரசு, வன்னியரசு, தனிச் செயலர் பாவலன், செய்தி தொடர்பாளர் ஆர்வலன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
பின்னர், வெளியே வந்த திருமாவளவனிடம், முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்ததன் நோக்கம் என்ன? என்று கேட்டனர்.இதற்கு பதில் அவர், தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் உள்ள எங்களுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளை ஒதுக்கியுள்ளார்கள். இந்த 2 தொகுதிகளிலும் யாரை போட்டியிட வைப்பது என்பது குறித்து முடிவு செய்ய, எங்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கூட்டம் ஏப்ரல் 1 ம் தேதி சென்னையில் கூடுகிறது. கூட்டத்தில், வேட்பாளர்கள் யார்? என்பது குறித்தும், எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும் விவாதித்து முடிவு செய்யப்படும் என்றார்.விழுப்புரம் தனித் தொகுதிக்கு பதிலாக, கள்ளக்குறிச்சி பொதுத் தொகுதியை மாற்றித்தர கேட்டதாக கூறப்படுகிறதே? என்று கேட்டதற்கு, தொகுதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்னதாக, நாங்கள் கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டோம். ஆனால், தற்போது சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.தொகுதி ஒதுக்கீட்டை பொறுத்தவரை எங்களுக்கு திருப்திதான் என்றார் திருமாவளவன்.