திருமாவளவன் வேட்புமனுத் தாக்கல் !
அரியலூர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.சிதம்பரம் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று காலை 11 மணியளவில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.அவருடன், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், தி.மு.க நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் வந்திருந்தனர்.முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறுகையில், "ஈழத் தமிழர்கள் மீது பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சனையை பேசுவதற்கு சரியான நபர் பொன்னுசாமியா அல்லது திருமாவளவனா என்பதை யோசிக்க வேண்டும் என்று தமிழறிஞர்கள் விரும்புகின்றனர்" என்றார்.ஈழத்தமிழர் பிரச்சனைக்காக, திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ள முழுஅடைப்புக்கு கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஓத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், ஈழத் தமிழர் பிரச்சனைக்காக நாளை தேர்தல் பிரச்சாரம் எதிலும் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
Wednesday, April 22, 2009
திருமாவளவன் வேட்புமனுத் தாக்கல் !
Tuesday, April 21, 2009
மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - திருமா
தொல்.திருமாவளவன் வேட்பு மனுதாக்கல் எப்போது ?
Friday, April 10, 2009
இலங்கையில் நடந்து வரும் இனப் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் நீதிகட்சி தலைவர் சுப.தமிழரசன், கவிஞர் அறிவுமதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதும் அப்பாவி தமிழர்கள் மீதும் சிங்கள படை கொடூரத் தாக்குதல் நடத்தி வருகிறது. புலிகள் சரணடையாவிட்டால் ஒட்டுமொத்தமாக தமிழ் இனத்தை அழிப்பேன் என அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கொக்கரித்துள்ளார். இதுபோன்று பேசுவதற்கு அவன் யாருக்கும் அஞ்சவில்லை.இலங்கையில் முல்லைத்தீவில் உள்ள பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்ட பகுதியில் 24 கி.மீ சதுர அடி சுற்றளவில் பதுங்கி உள்ள அப்பாவி தமிழர்களை சிங்கள அரசு விஷவாயு குண்டுகளை வீசி அழித்து வருகிறது. சமீபத்தில் கூட 450 தமிழர்கள் மொத்தமாக பலியாகியுள்ளனர்.இது போன்ற கொடூரம் 2ஆம் உலகப்போரின் போது கூட நடந்திராத கொடூரம். எனவே இந்த பிரச்சனையில் மனித நேய அடிப்படையில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.ஹீரோசிமா, நாகசாகிப் ஆகிய இடங்களில் விஷவாயு குண்டுகளை வீசி தாக்கிய சம்பவத்தை உலகம் இன்றும் கண்டித்து வருகிறது. அதன் பின்னர்தான் அணு ஆயுத தயாரிப்பு, அணுசக்தி ஒப்பந்தம் போன்றவற்றில் முறையான வரையறைகள் தேவை என விதிமுறைகள் வகுக்கப்பட்டன. ஆனால் அதுபோன்ற ஒரு தாக்குதல் நடத்த ராஜபக்சே தயாராகி வருகிறார்.சர்வதேச நாடுகள் தடை செய்துள்ள கிளஸ்டர் பாம் (கொத்துக் குண்டுகள்) வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். இதுபோன்ற தாக்குதல் நடத்தினால் உடலில் காயம் ஏற்படாது, நச்சு வாயு பரவி உடலில் படர்ந்து தோல் உரிந்து ரத்த வாந்தி எடுத்து சாக நேரிடும். இதுபோன்று சமீபத்தில் நடத்திய தாக்குதலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஏராளமான போராளிகள் கரிக்கட்டையாகி உயிர் இழந்துள்ளனர். ஆனாலும் செத்தாலும் மக்களோடு மக்களாகத்தான் சாவேன், நான் செத்தாலும் ஒருபிடி சாம்பல் கூட எதிரிகளின் கையில் கிடைக்க கூடாது என்று சபதம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் பிரபாகரன்.இலங்கையில் சிங்களப் படையினரின் விஷவாயு குண்டுகள் தாக்குதல் காரணமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று, நேற்று அதிகாலையில் செய்தி கேட்டு கலங்கினேன். பிரபாகரனுக்கு பாதிப்பு என்றால், அதன் பின்னர் திருமாவளவன் வெற்றிப் பெற்றால் என்ன, வெற்றி பெறாவிட்டால் என்ன? தேர்தலில் வெற்றிப்பெற்று டெல்லி சென்றால் என்ன, செல்லாவிட்டால் என்ன? எந்த இனத்தை காப்பதற்காக நாடாளுமன்றம் செல்வதற்காக தேர்தலில் போட்டியிடுகிறோமோ, அந்த இனமே அழிந்துவிட்டால் அதன் பின்னர் டெல்லி சென்று என்ன பயன்?. இதனால், மக்களவை தேர்தலில் போட்டியிடுவதையே தவிர்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தேன். இதுதொடர்பான நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பையும் ரத்து செய்ய நினைத்தேன்.ஆனால் "அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்" என்று ரவிக்குமார் எம்எல்ஏ, கெஞ்சினார். அதன் பின்னரே, எனது முடிவை மாற்றினேன். பின்னர், நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினோம். அப்போதும், 'இலங்கைத் தமிழரின் கடைசி நம்பிக்கை நீங்கள் தான்' என்று முதல்வரிடம் சொன்னேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஓர் மாவீரன் என்று முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியே பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட இலங்கை தமிழருக்காகத்தான் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து போராடி வருகிறது.ஆனால், தா.பாண்டியன் போன்றவர்கள், தாசில்தாராக மாறி எனக்கு சாதி சான்றிதழ் தரவேண்டிய அவசியமில்லை. எனக்கு சான்றிதழ் தரும் தகுதி மக்களை தவிர, யாருக்கும் கிடையாது. சர்க்கஸில் நடிப்பவர் அவர் தான்; நான் அல்ல. என்னைப் பற்றி பிரபாகரன் நன்கு அறிவார். தா. பாண்டியன் மீது நாங்கள் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் அல்லது யாரோயோ திருப்திப்படுத்துவதற்காக தா.பாண்டியன் இவ்வாறு பேசியுள்ளார்.இலங்கை தமிழர் பிரச்சனையை மையமாக வைத்து ஓர் தனி அணி அமைத்து, அதில் சேரும்படி என்னை அழைத்து நான் மறுத்திருந்தால் என் மீது குற்றம் சொல்லுங்கள். ஆனால் இப்போது அந்த அருகதை யாருக்கும் இல்லை.இலங்கை தமிழர் பாதுக்காப்பு இயக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சேர்ந்த பின்னர் தான் அந்த இயக்கத்துக்கே ஓர் மரியாதை கிடைத்தது, இல்லையெனில், அது ஓர் அதிமுகவின் பினாமி அமைப்பாகத்தான் இருந்திருக்கும்.திமுக கூட்டணியில் இருந்தபோதும், இலங்கை தமிழர் பிரச்சனைக்காக, திமுகவுக்கு எதிரான இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டேன், அதனால், முதல்வர் கருணாநிதிக்கு சங்கடம் நேர்ந்தபோது, நான் கூட்டணியில் இருக்கிறேனா, இல்லையா என்பதே நீங்களே முடிவு செய்யுங்கள் என்று முதல்வரிடம் கூறினேன். என்றாலும், 'விடுதலைச் சிறுத்தைகளுடனான கூட்டணி, தேர்தல் கூட்டணி அல்ல; அது ஓர் கொள்கை கூட்டணி' என்று அவர் அறிவித்த பின்னர் தான் தொடர்ந்து அதிலேயே நீடிப்பது என நாங்கள் முடிவு செய்து பணியாற்றி வருகிறோம். இல்லையெனில், இந்த தேர்தலை தனித்தே சந்தித்திருப்போம்.எந்த அணியில் இருந்தாலும் இலங்கை தமிழருக்காக உண்மையாகவும், உறுதியாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து போராடும். இலங்கை தமிழர்களை பாதுகாக்க, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மனிதாபிமானத்துடனும், தாயுள்ளத்துடனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.எந்த அணியில் இருந்தாலும் ஈழத் தமிழருக்காக உண்மையாகவும், உறுதியாகவும் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து போராடும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Wednesday, April 8, 2009
ஈழத்தமிழர்களை பாதுகாக்க தமிழர்களின் கடைசி நம்பிக்கை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திதான் என்று கூறியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், சோனியாகாந்தி நினைத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இலங்கை அதிபர் ராஜபக்சேவை டெல்லிக்கு வரவழைத்து, போர் நிறுத்த நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை ஆகியவற்றை வெளியிட்டு, அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
முல்லைத்தீவில் நச்சு புகைக்குண்டுகளை வீசி அப்பாவித் தமிழர்களை சிங்கள இனவெறி அரசு கொன்று குவித்து வருகிறது. சிங்களப் படையின் 58 மற்றும் 59வது படைப்பிரிவு புலிகளால் அழிக்கப்பட்டுள்ளது. அந்த படை பிரிவில் இந்திய படையினரும் களமிறங்கி மக்களை அழித்தொழிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஈழத்தமிழர்கள் மீது நச்சு புகைக்குண்டுகளை வீசி அழித்தொழிக்கும் கொடுமை, 2வது உலகப்போரில் கூட நடக்காத ஓர் கொடூரம் ஆகும். இதை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துகொண்டிருப்பதை சகிக்க முடியாது.
இந்த பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையிலும் தாயுள்ளத்தோடும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அணுகவேண்டும். அவர் நினைத்தால் சிங்கள அரசை கட்டுப்படுத்த முடியும். அவரது தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள முறையில் தோழமை உணர்வுடன் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். ஈழத் தமிழர்களை பாதுகாக்க தமிழர்களின் கடைசி நம்பிக்கை சோனியாகாந்திதான் என வெளிப்படையாக அறிவிக்கிறோம்.
முதல்வர் கருணாநிதியும் போர் நிறுத்தம் செய்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
சோனியா காந்தி நினைத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை டெல்லிக்கு வரவழைத்து, போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யமுடியும். எனவே எங்கள் இனத்தை காப்பாற்றுவதற்காக சோனியாவிடம் மடிப்பிச்சை கேட்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர்கள் அறிவிப்பு
தி.மு.க. கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அறிவித்தார்.சிதம்பத்தில் திருமாவளவனும்,விழுப்புரத்தில்எஸ்.பி.வேலாயுதமும் போட்டியிடுகின்றனர்.மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளை முதலமைச்சர் கருணாநிதி ஒதுக்கினார்.இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இன்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார். அதன்படி சிதம்பரம் தனி தொகுதியில் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் தனி தொகுதியில் எஸ்.பி.வேலாயுதமும் போட்டியிடுகின்றனர்.இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையும் திருமாவளவன் வெளியிட்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 40 தொகுதிகளில் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார்.மேலும், தமிழக உரிமைகளை மீட்போம், தமிழின நலன்களை காப்போம் என்ற கோஷத்தை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்றார்.சிதம்பரம் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த திருமாவளவன் தற்போது 3வது முறையாக போட்டியிடுகிறார்.மற்றொரு வேட்பாளரான வேலாயுதம், சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஆவார்.
Tuesday, April 7, 2009
தேர்தல் ஆலோசனை: கருணாநிதியை சந்தித்தார் திருமாவளவன்
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 ஏப்ரல் 2009 ( 13:04 IST )
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முதல்வர் கருணாநிதியை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முதல்வர் கருணாநிதியை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன், ரவிக்குமார் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோர் வந்திருந்தனர்.இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடந்தது.இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரும் உடனிருந்தனர்.முதல்வர் கருணாநிதியை சந்தித்துவிட்டு வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்களவை தேர்தலில் போட்டியிடும் தோழமை கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறது. இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினேன்" என்றார்."தேர்தல் பிரசாரத்தின்போது, மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கியும், மாநில உரிமை, நதிநீர் இணைப்பு, ஈழத்தமிழர் பிரச்சினை ஆகியவற்றை மக்கள் முன்பு வைத்து பிரசாரம் செய்வோம்"என்றும் அவர் கூறினார்."விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை 8ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.அப்போது, விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள்" என்று கூறிய திருமாவளவன் வரும் 10 ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.